இந்தியா

மகன் திருநங்கையாக மாறியதால் தகராறு: 2-வது மகனுடன் சேர்ந்து கணவரை அடித்து கொன்ற மனைவி

Published On 2023-04-01 13:34 IST   |   Update On 2023-04-01 13:34:00 IST
  • சுரேஷுக்கும் வினித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
  • படுகாயம் அடைந்த சுரேஷ் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், பெஜவாடா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி அருணா. தம்பதிக்கு வினித், ஆகாஷ் என 2 மகன்கள் உள்ளனர். வினித் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறினார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

இதில் விரக்தி அடைந்த வினித் வீட்டை விட்டு வெளியேறினார். இளைய மகன் ஆகாஷ் இன்டர்மீடியட் முடித்துவிட்டு பெற்றோருடன் வசித்து வந்தார்.

வீட்டை விட்டு வெளியே சென்ற வினித் 6 மாதத்திற்கு ஒரு முறை பெற்றோரை பார்த்து விட்டு செல்வது வழக்கம். வினித் வீட்டிற்கு வரும்போது எல்லாம் கணவன் மனைவி இடையே சண்டை அதிகரித்து வந்தது.

அப்போது அருணா தனது கணவரிடம் வினீத்தை சிறு வயது முதலே பெண்கள் செய்யும் வேலையை செய்ய சொன்னதால் திருநங்கையாக மாறிவிட்டான் என சண்டையிட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வினித் பெற்றோரை பார்க்க வீட்டிற்கு வந்தார். அப்போது சுரேஷுக்கும் வினித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த வினித் தந்தையை சரமாரியாக தாக்கி விட்டு சென்றார். பின்னர் மாலை அருணாவுக்கும், சுரேஷுக்கும் மீண்டும் தகராறு நடந்தது. தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த 2-வது மகன் ஆகாஷ் தனது தாயுடன் சேர்ந்து தந்தையை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுரேஷின் அண்ணன் ரமேஷுக்கு போன் செய்த அருணா கணவர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாக தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த ரமேஷ், சுரேஷ் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சுரேசை அடித்துக் கொலை செய்துவிட்டதாக போலீசில் புகார் செய்தார்.

சந்தேகத்தின் பேரில் அருணா மற்றும் அவரது மகன் ஆகாஷை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவரை அடித்து கொலை செய்ததாக அருணா ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் தாய், மகன் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News