இந்தியா

மல்லிகார்ஜூன கார்கே

வெளியே சிங்கமாக பேசும் மத்திய அரசு உள்ளே எலியாக இருக்கிறது - மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு

Published On 2022-12-20 05:36 IST   |   Update On 2022-12-20 05:36:00 IST
  • சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க விரும்புகிறோம்.
  • காங்கிரஸ் கட்சி எப்போதும் நாட்டுக்காக நின்றிருக்கிறது என்றார் காங்கிரஸ் தலைவர்.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானின் அல்வாரில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மோடி அரசு மிகுந்த வலிமையானது. யாரும் அவர்களது கண்களைக்கூட நேரடியாக பார்க்க முடியாது என மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால் எல்லைகளில் மோதலும், சர்ச்சைகளும் எழுகிறது.

கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் நமது வீரர்கள் 20 பேர் உயிரிழந்த பிறகு, அந்த நாட்டு அதிபரை பல முறை மோடி சந்தித்து பேசியிருக்கிறார். சந்திப்புகளை நடத்தியிருக்கிறார், அவருடன் ஊஞ்சல் ஆடியிருக்கிறார். இதெல்லாம் நடந்த பிறகும், சீன எல்லையில் இந்த மோதல் நீடிக்கிறது? வெளியே அவர்கள் சிங்கம் போல பேசுவார்கள், ஆனால் அவர்களது செயல்பாடுகளை நீங்கள் பார்த்தால், ஒரு எலியைப் போலத்தான் இருக்கும்.

சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க விரும்புகிறோம். அதற்காக நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம். அவர்கள் இன்னும் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு தயாராக இல்லை. எல்லையில் என்ன நடக்கிறது? அரசு என்ன செய்கிறது? நமது எல்லை மற்றும் வீரர்களின் நிலை என்ன என்று விவாதிக்க விரும்புகிறோம். ஆனால் இந்த விவாதம் நடத்தாமல் ஏன் ஒளிந்து கொண்டு ஓடுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

Tags:    

Similar News