ரூ.18 லிருந்து 72க்கு உயரும் சிகரெட் விலை... புகைப் பழக்கத்தை கைவிடுவார்களா பிரியர்கள்?
- சிகரெட்டுகளுக்கு 1,000 குச்சிகளுக்கு ரூ.200-735 வரை இருந்த கலால் வரி ரூ.2,700–11,000 ஆக உயரும்
- புகையிலை மீதான வரிகள் 25% முதல் 100% வரை நான்கு மடங்கு அதிகரிக்கும்
மத்திய அரசின் கலால் சட்டத்திருத்தத்தால், ஒரு சிகரெட் விலை ரூ.18-ல் இருந்து ரூ.72ஆகவும், புகையிலை மீதான வரிகள் 25% முதல் 100% ஆகவும் உயர வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய கலால் (திருத்த) மசோதா, 2025 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அது சட்டமாக மாறும்பட்சத்தில் இந்தியாவில் சிகரெட் மற்றும் புகையிலைகளின் விலைகள் உயரும். நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அறிமுகப்படுத்திய இந்த மசோதா, சிகரெட் மற்றும் சுருட்டுகள் முதல் ஹூக்கா மற்றும் மெல்லும் புகையிலை வரை பல்வேறு புகையிலை பொருட்களின் மீதான கலால் வரிகளை திருத்துகிறது. அதாவது இந்தப் பொருட்கள் மீதான கலால் மற்றும் வீத வரியை உயர்த்துகிறது.
இந்தத் திருத்தத்தின் கீழ், சிகரெட்டுகளுக்கு 1,000 குச்சிகளுக்கு ரூ.200-735 வரை இருந்த கலால் வரி ரூ.2,700–11,000 ஆக உயரும், இது வகை மற்றும் நீளத்தைப் பொறுத்து இருக்கும். மெல்லும் புகையிலை மீதான வரிகள் 25% முதல் 100% வரை நான்கு மடங்கு அதிகரிக்கும், ஹூக்கா புகையிலை 25% முதல் 40% வரை உயரும்.
மேலும் புகைபிடிக்க பயன்படுத்தும் குழாய்கள் மற்றும் புகையிலைக் கூறுகளின் கலவைகளுக்கான வரி ஐந்து மடங்கு அதிகரிக்கும், அதாவது 60% முதல் 300% வரை அதிகரிக்கும். இன்று ரூ.18 விலையில் உள்ள ஒரு சிகரெட்டின் விலை விரைவில் ரூ.72 ஆக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.