null
"சத்தீஸ்கர் என்கவுன்டர்கள் திட்டமிடப்பட்ட கொடுமையின் வடிவம்.." சர்வதேச இந்திய அமைப்புகள் கண்டன அறிக்கை
- வரிசையாக வைக்கப்பட்டிருந்த சடலங்களுக்கு முன்னால் ஆயுதங்களுடன் நடனமாடி புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
- இந்த நடவடிக்கைகள் போர்க்குற்றங்களுக்குச் சமம்.
நக்சலிசத்தை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று மத்திய அரசு சபதம் எடுத்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மேடைதோறும் இதேயே முழங்கி வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான நக்சலைட்டுகள் பாதுகாப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வரம்பற்ற என்கவுன்டர்கள் குறித்து கவலை தெரிவித்து வெளிநாடு வாழ் இந்தியர்களின் அமைப்புகள் கூட்டாக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், இந்தியாவில் கல்வி சுதந்திரத்திற்கான சர்வதேச ஒற்றுமை (InSAF India), SOAS Bla(c)k Panthers, இந்திய தொழிலாளர் சங்கம் GB, இந்திய தொழிலாளர் ஒற்றுமை (UK) உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.
கடந்த மாதம் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் காட்டில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் நம்பலா கேசவ ராவ் மற்றும் 26 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இதில் 12 பெண்களும் அடங்குவர்.
நக்சல்கள் பேசுவார்த்தைக்கு சம்மதித்தும் மத்திய அரசு அதை ஏற்காமல் பாசிச போக்குடன் நடந்து கொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் இந்த என்கவுன்டர்களை மையப்படுத்தி கண்டன அறிக்கை வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கர் என்கவுன்டர்கள்
அந்த அறிக்கையில், "சத்தீஸ்கரில் உள்ள பஸ்தர் பிரிவின் நாராயண்பூர் மாவட்டத்தில் அபுஜ்மத் பகுதியில் கடந்த மே 21, 2025 அன்று 28 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உட்பட, ஆதிவாசி பகுதிகளில் மாநில மற்றும் மத்தியப் படைகள் தொடர்ந்து கொலைகளை செய்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதே அளவில், சத்தீஸ்கர் காவல்துறையினர், கொல்லப்பட்ட எட்டு பேரின் உடல்களை சட்டவிரோதமாக எரித்ததையும் கண்டிக்கிறோம்"
"ஆரம்பத்திலிருந்தே அரசின் நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியின்படி இல்லாமல், திட்டமிட்ட கொடுமையின் வடிவமாகவே இருந்துள்ளன. கொலைகளைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் பொதுவெளியில் அதை கொண்டாடினர்.
வரிசையாக வைக்கப்பட்டிருந்த சடலங்களுக்கு முன்னால் ஆயுதங்களுடன் நடனமாடி புகைப்படங்களை எடுத்துள்ளனர். எந்த ஒரு முறையான நடைமுறையும் இல்லாமல் தனது சொந்த குடிமக்களைக் கொல்வதில் அரசின் வெற்றியை இது வெளிப்படுத்துகிறது" என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உடல்கள் முறையாக பாதுகாக்கப்படாமல் சிதைக்க விடப்பட்டதாகவும், உடல்களைப் பெற வந்த குடும்பத்தினர் துன்புறுத்தப்பட்டு வாய்மொழியாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆதாரங்களை அழித்து நீதித்துறை ஆய்வைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, வாழ்க்கையிலும் இறப்பிலும் கண்ணியத்திற்கான உரிமையை உத்தரவாதம் செய்யும் இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கடுமையான மீறல் என்று அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
"சட்டத்திற்குப் புறம்பான மரணதண்டனை, உடல்களை வலுக்கட்டாயமாக எரித்தல், குடும்பங்களுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் உடல்களை வேண்டுமென்றே மறைத்தல் ஆகியவை மனிதாபிமானச் சட்டத்தை மீறுவதாகும். இந்த நடவடிக்கைகள் போர்க்குற்றங்களுக்குச் சமம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சிபிஐ (மாவோயிஸ்ட்) மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து போர்நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான பல கோரிக்கைகள் இருந்தபோதிலும், அரசாங்கம் இந்தப் படுகொலையை நடத்தியது மற்றும் சொந்த குடிமக்களை பொதுவில் சட்டவிரோதமாக எரித்தது வருத்தமளிக்கிறது" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"சர்வதேச சமூகமும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இந்த அநீதிக்கு எதிராக அவசரமாகவும், வலுவாகவும், சமரசமில்லாமலும் பதிலளிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
நாராயண்பூரில் நடந்தது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. இது ஒரு திருப்புமுனை. இந்த மோதல் தீர்க்கப்படாவிட்டால் இதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்" என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.