இந்தியா

சிறைகளில் சாதி பாகுபாடு: தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Published On 2024-01-04 03:05 GMT   |   Update On 2024-01-04 03:05 GMT
  • சிறைச்சாலை கையேடுகள் சிறைக் கைதிகளுக்கான பணிகளை ஒதுக்குவதிலும், கைதிகளை அடைத்து வைப்பதிலும் சாதிய பாகுபாட்டை ஊக்குவிப்பதாக உள்ளன.
  • விசாரணை கைதிகளையும், தண்டனை கைதிகளையும் தனித்தனியாக பிரித்து வைப்பது வழக்கம்.

புதுடெல்லி:

மகாராஷ்டிரத்தை சேர்ந்த சுகன்யா சாந்தா சார்பில் வக்கீல் எஸ்.பிரசன்னா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சிறைச்சாலைகளில் உள்ள கையேடுகள், விதிகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் எஸ்.முரளிதர் ஆஜராகி, 'தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களின் சிறைச்சாலை கையேடுகள் சிறைக் கைதிகளுக்கான பணிகளை ஒதுக்குவதிலும், கைதிகளை அடைத்து வைப்பதிலும் சாதிய பாகுபாட்டை ஊக்குவிப்பதாக உள்ளன' என வாதிட்டார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'சிறைச்சாலைகளில் சாதிய பாகுபாடு குறித்து கேள்வி எழவில்லை. விசாரணை கைதிகளையும், தண்டனை கைதிகளையும் தனித்தனியாக பிரித்து வைப்பது வழக்கம்' என வாதிட்டா்ா.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 'தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களின் சிறைக் கையேடுகளை தொகுக்குமாறு மூத்த வக்கீல் எஸ்.முரளிதரை கேட்டதுடன், சிறைச்சாலை கையேடுகள் சிறைகளில் சாதி பாகுபாட்டை ஊக்குவிப்பதாக தெரிவித்து தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.

Tags:    

Similar News