நாகர்கோவில் ரெயிலில் கல்வீசிய பள்ளி மாணவர்கள் 5 பேர் மீது வழக்கு
- எங்கக்காடு ரெயில்வே கேட் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி கற்கள் வீசப்பட்டன.
- ரெயில்கள் மீது கல்வீசியது பள்ளி மாணவர்கள் 5 பேர் என்பது கண்டறியப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ரெயில்களின் மீது கல்வீசும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. வந்தே பாரத் உள்ளிட்ட சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீது கல்வீச்சில் சம்பவத்தில் ஈடுபட்ட சிலர் கடந்த மாதம் கைது செய்யப் பட்டனர். இந்நிலையில் நாகர்கோவில் செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ், பெங்களூரு செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீது வடக்கஞ்சேரி ரெயில் நிலையம் அருகே உள்ள எங்கக்காடு ரெயில்வே கேட் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி கற்கள் வீசப்பட்டன.
இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரெயில்கள் மீது கல்வீசப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருச்சூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன் குட்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், ரெயில்கள் மீது கல்வீசியது பள்ளி மாணவர்கள் 5 பேர் என்பது கண்டறியப்பட்டது. அந்த மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.