இந்தியா

திருப்பதி அருகே கார் விபத்து: திருமணம் நிச்சயித்த பெண் உயிரிழப்பு

Published On 2022-08-09 10:21 GMT   |   Update On 2022-08-09 10:21 GMT
  • பிரியங்கா அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வந்தார்.
  • பிரியங்காவுக்கு கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

திருப்பதி:

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் பிரியங்கா. இவர் அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வந்தார்.

பிரியங்காவுக்கு கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருப்பதி திருமலையில் உள்ள மண்டபத்தில் கல்யாணம் நடத்த பிரியங்கா குடும்பத்தார் முடிவு செய்தனர்.

நேற்று பிரியங்கா, அவரது தந்தை, தாய், சகோதரர் உட்பட 4 பேர் காரில் திருப்பதிக்கு புறப்பட்டனர். சிறிது தூரம் செல்வம் காரை ஓட்டி வந்தார். பின்னர் பிரியங்கா காரை ஓட்டினார். திருப்பதி அடுத்த வடமால பேட்டை அஞ்சேரம்மா கோவில் அருகே கார் வந்தது.

வேகமாக காரை ஓட்டி வந்த பிரியங்கா சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காததால் அதில் கார் வேகமாக ஏறி இறங்கியது. கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.

இதில் காரின் இடுப்பாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பிரியங்கா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரது தாய், தந்தை, சகோதரர் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடமால பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் பிரியங்காவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் நிச்சயித்த பெண் பலியான சம்பவம் காஞ்சிபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News