இந்தியா

மெகுல் சோக்சி

மெகுல் சோக்சியை காப்பாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது- ஆம் ஆத்மி தலைவர் குற்றச்சாட்டு

Published On 2023-03-21 13:40 GMT   |   Update On 2023-03-21 13:40 GMT
  • மெகுல் சோக்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ரெட்-கார்னர் நோட்டீசை இண்டர்போல் அமைப்பு ரத்து செய்துள்ளது.
  • மெகுல் சோக்சி ஆன்டிகுவா குடியுரிமை பெறுவதற்கு இந்திய அரசு தடையில்லாச் சான்றிதழை வழங்கியது.

புதுடெல்லி:

வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிரவ் மோடி லண்டனில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆன்டிகுவா நாட்டில் தஞ்சம் பெற்றார். ஆன்டிகுவாவில் கடந்த 2018-ம் ஆண்டு குடியுரிமையும் பெற்றார். தேடப்படும் நபர்களை நாடு கடத்துதல் தொடர்பாக இந்தியா மேற்கொண்ட நாடுகளின் ஒப்பந்த பட்டியலில் ஆன்டிகுவா இல்லை. எனினும், அவரை நாடு கடத்துதல் தொடர்பான முயற்சிகளில் இந்திய விசாரணை முகமைகள் ஈடுபட்டன. மெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் சார்பில் ரெட்-கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், மெகுல் சோக்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ரெட்-கார்னர் நோட்டீசை இண்டர்போல் அமைப்பு ரத்து செய்துள்ளது. இது இந்திய விசாரணை அமைப்புகளுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

மெகுல் சோக்சி விஷயத்தில் மத்திய பாஜக அரசு மீது ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா குற்றம்சாட்டி உள்ளார். தப்பியோடிய மெகுல் சோக்சிக்கு சிவப்பு கம்பள மரியாதை அளித்து அவரை காப்பாற்ற பாஜக முயற்சிப்பதாக ராகவ் சத்தா கூறியிருக்கிறார்.

மெகுல் சோக்சி ஆன்டிகுவா குடியுரிமை பெறுவதற்கு இந்திய அரசு தடையில்லாச் சான்றிதழை வழங்கியது. அதேபோல் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பில் அவருக்கு எதிராக உறுதியான ஆதாரங்களை வழங்கத் தவறியதால், அவரது பெயர் ரெட் கார்னர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும் ராகவ் சத்தா தெரிவித்தார்.

Tags:    

Similar News