பெங்களூரு: மதிய உணவிற்கு வெளியே சென்ற வங்கி ஊழியர் பைக் மோதி உயிரிழப்பு!
- ஓடிச் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த ராயல் என்பீல்டு புல்லட் மோதி இழுத்து செல்லப்பட்டார்.
- பைக் ஓட்டி வந்த தீபக் (21) என்ற இளைஞரும் கீழே விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்
பெங்களூருவில் மதிய உணவிற்காக வெளியே சென்ற வங்கி ஊழியர் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர் லக்கேரே அருகே உள்ள கெம்பேகவுடா லேஅவுட்டில் வசிக்கும் யோகேஸ்வரி (27) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் ராஜாஜிநகரில் உள்ள HDFC வங்கியில் பணிபுரிந்தார். திங்கட்கிழமை, மதியம் 12:30 மணியளவில், யோகேஸ்வரி தனது சக ஊழியருடன் அருகிலுள்ள உணவகத்திற்கு மதிய உணவு வாங்க சென்றுள்ளார்.
உணவு வாங்கிக்கொண்டு இருவரும் ராஜ்குமார் சாலையை கடக்க நின்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த வாகனத்தைக் கண்டு அவரது சக ஊழியர் பாதியிலேயே நின்றுவிட்டார். ஆனால், யோகேஸ்வரி வாகனத்தின் வேகத்தைக் கணிக்கத் தவறி ஓடிச் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த ராயல் என்பீல்டு புல்லட் மோதி இழுத்து செல்லப்பட்டார்.
தலையில் பலத்த காயமடைந்த அவரைமீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சக ஊழியர்கள் அனுமதித்துள்ளனர். ஆனால் அதிக ரத்த இழப்பு காரணமாக உயிரிழந்தார். இதனிடையே பைக் ஓட்டி வந்த தீபக் (21) என்ற இளைஞரும் கீழே விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.