இந்தியா

அமித் ஷா அவதூறு வழக்கு.. நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ராகுல் காந்தி

Published On 2026-02-20 14:27 IST   |   Update On 2026-02-20 14:27:00 IST
  • 2010இல் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷா கைது செய்யப்பட்டிருந்தார்.
  • அடுத்த விசாரணை மார்ச் 9 அன்று நடைபெறும்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.

2018 இல் கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது பெங்களூரு தேர்தல் பிரசாரத்தில் அப்போது பாஜக தேசிய தலைவராக இருந்த அமித் ஷா குறித்து ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

ஒரு கொலை வழக்கு குற்றவாளி பாஜக தேசிய தலைவராக இருப்பதாக ராகுல் காந்தி சாடியிருந்தார்.

இந்த கருத்துக்களுக்காக ராகுல் மீது உ.பி.யின் சூல்தான்பூரை சேர்ந்த பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில் இன்று நேரில் ஆஜரான ராகுல் காந்தி நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். ராகுல் தனது வாதத்திற்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறும், அடுத்த விசாரணை மார்ச் 9 அன்று நடைபெறும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக கடந்த ஜூலை 2024 இல் இந்த வழக்கில் ராகுல் காந்தி தனது முதல் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் நேரில் பதிவு செய்திருந்தார். வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த டிசம்பரில் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தபோது ராகுல் ஆஜராக தவறிய நிலையில் ஜனவரியில் மீண்டும் நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட்டின் படி தற்போது ஆஜராகி உள்ளார்.

2010 இல் சோரபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்டர் செய்த வழக்கில் அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News