இந்தியா

ஆராட்டு விழா

பத்மநாபசாமி கோவில் ஆராட்டு விழா ஊர்வலம் - 5 மணிநேரம் மூடப்பட்ட விமான நிலையம்

Published On 2022-11-01 19:45 GMT   |   Update On 2022-11-01 19:45 GMT
  • திருவனந்தபுரம் விமான நிலையம் நேற்று 5 மணி நேரம் மூடப்பட்டது.
  • மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விமானங்கள் புறப்படவும், இறங்கவும் தடை விதிக்கப்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் ஐப்பசி திருவிழாவின்போது பரிவேட்டை நிகழ்ச்சி மற்றும் ஆராட்டு விழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான விழா தொடங்கி நடந்துவருகிறது. நேற்று பரிவேட்டை விழா நடந்தது. இன்று ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது பத்மநாப சுவாமி கோவிலில் இருந்து சுவாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஊர்வலத்தில் பத்மநாப சுவாமி, நரசிங்கமூர்த்தி, கிருஷ்ணன் விக்கிரங்கள் இடம்பெறும்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த ஊர்வலம் திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை வழியாக செல்லும். இதற்கு காரணம் இந்த ஊர்வலம் செல்லும் பாதையில் தான் 1932-ம் ஆண்டு விமான நிலையம் அமைக்கப்பட்டது. அப்போது கோவில் ஊர்வலம் நடைபெறும்போது, விமான நிலையம் மூடப்பட்டு ஊர்வலத்திற்கு வழிவிடப்படும் என்றும், ஊர்வலம் சென்றபின்பே விமான நிலையத்தில் விமானங்கள் இறங்கவும், புறப்படவும் அனுமதி வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் பத்மநாபசுவாமி கோவிலில் ஐப்பசி மற்றும் பங்குனி மாத திருவிழாக்களின் போது விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படுவது வழக்கம்.

இந்நிலையில், ஐப்பசி திருவிழா ஆராட்டு ஊர்வலத்தையொட்டி நேற்று திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை 5 மணி நேரம் மூடப்பட்டது. அதன்படி, மாலை 4 மணியில் இருந்து இரவு 9 மணிவரை விமான நிலையம் மூடப்பட்டு இருந்தது. அதற்கேற்ப சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் என 10 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.

Tags:    

Similar News