இந்தியா

அமெரிக்க பெண் உள்பட 5 பேரை ஏமாற்றி திருமணம் செய்த சாப்ட்வேர் என்ஜினீயர்

Published On 2022-07-29 06:16 GMT   |   Update On 2022-07-29 06:16 GMT
  • கடந்த 2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
  • முதல் மனைவிக்கு தெரியாமல் 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த வேறு ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

ஆந்திர மாநிலம் அம்பவாரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 16-ந் தேதி விஜயவாடாவை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தம்பதியினர் ஐதராபாத்தில் வாடகை வீடு எடுத்து தங்கினர்.

இந்த நிலையில் புதியதாக வீடு கட்ட ரூ.80 லட்சம் தேவைப்படுவதாகவும், உன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று பணத்தை வாங்கி வர வேண்டும் என இளம்பெண்ணிடம் சதீஷ்குமார் கூறினார். அதற்கு இளம்பெண் தன்னுடைய தாய் வீட்டில் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்தார்.

பணத்தை வாங்கி வரவில்லை என்றால் படுக்கை அறையில் எடுத்த நிர்வாண போட்டோக்களை ஆபாச வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார். இதையடுத்து இளம்பெண் பணம் வாங்கி வருவதாக கூறி தனது தாய் வீட்டிற்கு செல்லாமல் பெங்களூருவில் உள்ள தனது தோழி வீட்டிற்கு சென்று அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

பெங்களூருக்கு சென்ற சதீஷ்குமார் தனது மனைவி வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று மனைவியை மீண்டும் மிரட்டினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் கணவரின் செல்போனை பிடுங்கி அதில் உள்ள போட்டோக்களை ஆய்வு செய்தபோது மேலும் 4 பெண்களை அவர் திருமணம் செய்த போட்டோக்கள் செல்போனில் இருந்தது.

இதனைக் கண்டு திடுக்கிட்ட இளம்பெண் இதுகுறித்து குண்டூர் டி.ஐ.ஜி.யிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகூர் மீரான், தரங்கினி ஆகியோர் சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்த 2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து தனது மனைவியுடன் அமெரிக்காவில் வேலைக்குச் சென்ற சதீஷ் பாபு முதல் மனைவிக்கு தெரியாமல் 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த வேறு ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் முதல் மனைவிக்கு தெரிந்ததால் அவரை விவாகரத்து செய்துள்ளார்.

மீண்டும் ஆந்திராவிற்கு வந்த சதீஷ்குமார் குண்டூர் நரசராவ் பேட்டை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 2017-ம் ஆண்டும், 2019-ம் ஆண்டு நெல்லூரை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து மேலும் இதுபோல் வேறு பெண்கள் யாரையாவது திருமணம் செய்து ஏமாற்றினாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News