பீகார் செங்கல் சூளையில் பயங்கர விபத்து- உரிமையாளர் உள்பட 6 பேர் பலியான சோகம்
- காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- இந்த துயர சம்பவம் பற்றி கேள்விப்பட்ட முதல்வர் நிதிஷ் குமார், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
மோதிஹரி:
பீகார் மாநிலம் கிழக்கு சம்பரன் மாவட்டம், ராம்கர்வா பகுதியில் செங்கல் சூளை உள்ளது. இன்று வழக்கம்போல் ஊழியர்கள் செங்கல் சூளையில் பணியாற்றிக்கொண்டிருந்தனர். மாலையில் திடீரென அங்கு குண்டுவெடித்ததுபோன்று பலத்த சத்தம் கேட்டது. சிம்னி வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. இதனால் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். சிலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் செங்கல் சூளை உரிமையாளர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த துயர சம்பவம் பற்றி கேள்விப்பட்ட முதல்வர் நிதிஷ் குமார், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.