இந்தியா
உக்ரைன் விவகாரம் - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பாராளுமன்றத்தில் நாளை அறிக்கை தாக்கல்
கொரோனா 3-வது அலை காரணமாக முதல் பகுதியில் மக்களவையும், மாநிலங்களவையும் தனித்தனி நேரத்தில் நடந்தது.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. இரு அவைகள் அடங்கிய கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இறுதியில் அந்த விவாதத்துக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். பிப்ரவரி 11-ம் தேதியுடன் முதல் பகுதி கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று தொடங்குகிறது. கொரோனா பரவல் தணிந்து விட்டதால், இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன.
இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறார்.
பாராளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.