இந்தியா
சமாஜ்வாடி கட்சி பயங்கரவாதிகளை பாதுகாக்கிறது - யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
பயங்கரவாத அமைப்பினர் 38 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
லக்னோ:
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. 3-வது கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் லக்னோவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
பாஜக அரசு அனைத்து நம்பிக்கைகளையும் மதித்து பாதுகாப்பை முழுமையாக கவனித்துக் கொள்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு தீவிரவாதச் சம்பவமும் நடைபெறவில்லை.இதற்கு மிகப்பெரிய காரணம், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாது என்பது அவர்களுக்கு தெரியும்.
சமாஜ்வாடி கட்சி பயங்கரவாதிகளை பாதுகாக்கிறது. இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பினர் 38 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.மரண தண்டனை விதிக்கப்பட்ட 38 பேரில் ஒருவர் சஞ்சர்பூரை சேர்ந்தவர்.
அந்த பயங்கரவாதியின் தந்தை சமாஜ்வாதி கட்சியுடன் தொடர்புடையவர். சட்டசபை தேர்தலில் அந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.