இந்தியா
பாஜகவுக்கு வாக்களித்தால் 50 ரூபாய்க்கு மது விற்கப்படும் - ஆந்திராவில் பிரச்சாரம்
ஆந்திராவில் ஓவ்வொரு தனிநபரும் மாதத்திற்கு 12,000 ரூபாயை மதுபானம் வாங்க செலவிடுகின்றனர் என பாஜக தலைவர் சோமு வீர்ராஜூ கூறினார்.
விஜயவாடா:
ஆந்திர பிரதேசம் மாநிலம் விஜயவாடாவில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சியின் தலைவர் சோமு வீர்ராஜூ கூறியதாவது:-
2024-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஆந்திர மக்கள் பாஜகவிற்கு ஒரு கோடி வாக்களித்தால் 70 ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்வோம். வருமானம் அதிகமாக இருந்தால் 50 ரூபாய்க்கு கூட மதுவை விற்பனை செய்வோம்.
ஆந்திராவில் தரமான மதுபானங்கள் விற்கப்படுவதில்லை. போலி ஸ்டிக்கர்கள் ஒட்டி மதுபானங்கள் விற்கப்படுகின்றன. மதுவிலக்கு அமலில் இருப்பதாக கூறி மாநில அரசே மதுவை தயாரித்து விற்பனை செய்கிறது. ஆந்திராவில் ஓவ்வொரு தனிநபரும் மாதத்திற்கு 12,000 ரூபாயை மதுபானம் வாங்க செலவிடுகின்றனர். இந்த பணத்தை நல திட்டங்கள் என்ற பெயரில் திருப்பி கொடுத்து, மக்களுக்கு நன்மை செய்வதாக அரசு ஏமாற்றுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் மாநில அரசு மதிப்புக்கூட்டப்பட்ட வரியை ரத்து செய்தது. இருப்பினும் இதன் பலன்கள் மக்களை சென்றடையவில்லை. அதிக விலைக்கே மதுபானங்கள் விற்கப்படுகின்றன. ஏழைகள் மது அருந்துவதை தடுக்க அதிக விலைக்கு மது விற்கப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது.
இவ்வாறு சோமு வீர்ராஜூ பேசினார்.