செய்திகள்
ஸ்மார்ட்போன்

விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்க ரூ.1,500 நிதியுதவி: குஜராத் அரசு அறிவிப்பு

Published On 2021-11-22 02:23 GMT   |   Update On 2021-11-22 02:23 GMT
விவசாயிகளின் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், ஸ்மார்ட்போன் வாங்கிய ரசீதின் நகல், போனின் ஐ.எம்.இ.ஐ. எண், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு நிதியுதவி அளிக்கப்படும்.
ஆமதாபாத் :

குஜராத்தில் உள்ள விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக அம்மாநில அரசு ரூ.1,500 வரை நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

இதன்படி, ஸ்மார்ட்போன் விலையில் 10 சதவீதம் அல்லது ரூ.1,500 இவற்றில் எது குறைவோ அந்த தொகை நிதியுதவியாக வழங்கப்படும். இதற்கான பிரத்யேக இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளும் இதில் பலனடையலாம். ஆனால், கூட்டாக விவசாயம் செய்பவர்களில், தலா ஒருவருக்கு மட்டுமே நிதியுதவி அளிக்கப்படும். ஸ்மார்ட்போனை தவிர, இயர்போன், பவர் பேங்க், சார்ஜர் போன்ற சாதனங்கள் வாங்க இத்திட்டம் பொருந்தாது.

விவசாயிகளின் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், ஸ்மார்ட்போன் வாங்கிய ரசீதின் நகல், போனின் ஐ.எம்.இ.ஐ. எண், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு நிதியுதவி அளிக்கப்படும்.

விவசாயிகளுக்கான நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், வானிலை தகவல்கள், பூச்சி மருந்து விவரங்கள், நவீன பண்ணை தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவது நல்லது என்று மாநில வேளாண்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News