செய்திகள்
ஸ்வப்னா சுரேஷ்

கேரளா தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ்க்கு ஜாமீன்

Published On 2021-11-02 11:07 GMT   |   Update On 2021-11-02 12:47 GMT
தூதரகம் பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷக்கு, கேரள மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல்களில் 13.82 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தூதரக பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் கேரளாவை மட்டுமல்லாமல், நாட்டையே புரட்டி போட்டது.

தங்கம் கடத்தலுக்கு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். அவர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்தது. சுங்கத்துறை சார்பில் காஃபிபோசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஸ்வப்னா சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் வழங்கும்படி கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரின் ஜாமீன் மனு இன்று விசாணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

25 லட்சம் ரூபாய் ஜாமீன் பத்திரம், மேலும் அதற்கான பணத்தை வழங்க திறன்கொண்ட இருவர் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக,

கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல்களில் 13.82 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை தூதரக தொடர்புள்ள எந்தவொரு கடத்தல் நிகழ்வும் இதற்கு முன் இந்தியாவில் நடைபெற்றதில்லை என்பதால் தங்க கடத்தல் சம்பவம் கேரளாவை மட்டுமல்லாமல் நாட்டையே புரட்டி போட்டது.

இச்சம்பவத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் மேலும் பரபரப்பை கூட்டியது. இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன், முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர்.

கேரள ஆளும் கட்சிக்கு தொடர்புடைய இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமை, சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் விசாரித்து வருகின்றன.
Tags:    

Similar News