செய்திகள்
பிரதமர் நிவாரண நிதிக்கு சேமிப்பை வழங்கிய சிறுமி கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் நிவாரண நிதிக்கு தனது சேமிப்பில் இருந்து ரூ. 5100 கொடுத்த காசியாபாத்தை சேர்ந்த சிறுமி சரியான நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காததால் உயிரிழந்துவிட்டதாக கூறி வீடியோ வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோவில், நபர் ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டரை தூக்கி வந்து தரையில் வைக்கிறார். எனது மகள் தான் சேமித்து வைத்திருந்த ரூ. 5100 தொகையை பிரதமர் நிவாரண நிதிக்கு கொடுத்தார். இங்கு நான் அவளுக்கு ஆக்சிஜன் கொடுக்க போராடி வருகிறேன். பிரதமர் மோடி மற்றும் அரசாங்கம் என மகளுக்கு ஆக்சிஜன் வழங்க கேட்டுக் கொள்கிறேன் என கூறுகிறார்.
இந்த வீடியோவை ஆய்வு செய்ததில், பிரதமர் நிவாரண நிதிக்கு சேமிப்பை வழங்கிய சக்தி பான்டே எனும் சிறுமி தற்போது நலமுடன் இருக்கிறார் என தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த சிறுமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளானார் என்றும் தெரியவந்துள்ளது. எனினும், வைரல் பதிவுகளில் உள்ளது போன்று அந்த சிறுமி உயிரிழக்கவில்லை என உறுதியாகி இருக்கிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.