செய்திகள்
கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் பரவியதா?: மந்திரி பிரபு சவான் பதில்
கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் பரவியதா? என்பதற்கு கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு :
கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் யாதகிரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் இதுவரை பறவை காய்ச்சல் பரவவில்லை. அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் மராட்டியத்தில் பறவை காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு கோழிகள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் எங்காவது பறவைகள் இறந்து கிடந்தால் அதுபற்றி பொதுமக்கள் கால்நடைத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் ஆதங்கப்பட தேவை இல்லை. எடியூரப்பா சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார். மாநிலத்தை முன்னேற்ற பாடுபட்டு வருகிறார்.
மந்திரிசபை விரிவாக்கம் மட்டுமே நடக்கிறது. காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மந்திரிசபையை மாற்றி அமைக்கும் திட்டம் இல்லை. இதை எடியூரப்பா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். ஆனாலும் எடியூரப்பா எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட மாட்டேன்.
இவ்வாறு பிரபுசவான் கூறினார்.