செய்திகள்
தீவிபத்தில் சிக்கி 10 குழந்தைகள் பலி - பந்த்ரா மருத்துவமனையில் கவர்னர் இன்று ஆய்வு
மகாராஷ்டிராவில் தீ விபத்தில் சிக்கி 10 பச்சிளம் குழந்தைகள் பலியான பந்த்ரா மருத்துவமனைக்கு அம்மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி இன்று செல்கிறார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சிறப்பு பிரிவில் கடந்த 9-ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டன. நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
முதல் மந்திரி உத்தவ் தாக்கரே விமானம் மூலம் மும்பையில் இருந்து பந்த்ரா சென்று மருத்துவமனை தீ விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான பந்த்ரா மருத்துவமனைக்கு புதன்கிழமை (இன்று) செல்கிறார் என ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.