செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி

கடந்த 6 மாதங்களில் மத்திய மந்திரிகளின் செயல்பாடு குறித்து பிரதமர் மோடி ஆய்வு

Published On 2019-12-22 00:43 IST   |   Update On 2019-12-22 00:43:00 IST
கடந்த 6 மாதங்களில் மத்திய மந்திரிகளின் செயல்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார்.
புதுடெல்லி:

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக ஆட்சி பொறுப்பேற்று நவம்பர் மாதத்துடன் 6 மாதங்கள் நிறைவடைந்தது.

வழக்கமாக மாதந்தோறும் மந்திரிசபை கூட்டங்களுக்கு பின்னர் மத்திய மந்திரிகள் ஒன்றாக சந்தித்துக் கொள்வார்கள். கடந்த சில வாரங்களாக மந்திரிசபை கூட்டங்களின்போது பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மந்திரிகள் அரசின் கொள்கைகளை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்தார். அந்த நிகழ்வுகளில் பல மந்திரிகளும் உடன் இருப்பார்கள்.

ஆனால் நேற்று பிரதமர் மோடி மந்திரிகளிடம் தனித்தனியாக அவர்களின் கடந்த 6 மாத செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார். குறிப்பாக வேளாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் சமூக நலத்துறை ஆகிய துறைகளில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. அப்போது மந்திரிகள் தாங்கள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கம் அளித்தனர். காலையில் தொடங்கிய இந்த ஆய்வு மாலை வரை நீடித்தது.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய அளவில் குடிமக்கள் பதிவேடுக்கான கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்துவரும் வேளையில் இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை.

Similar News