செய்திகள்
தற்கொலை

டெல்லி அருகே மகன், மகளை கொன்று விட்டு தம்பதி தற்கொலை

Published On 2019-12-04 00:33 GMT   |   Update On 2019-12-04 00:33 GMT
டெல்லி அருகே மகன், மகளை கொன்ற தம்பதி 8-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
காசியாபாத்:

டெல்லி அருகே உத்தரபிரதேச மாநில எல்லைக்கு உட்பட்ட காசியாபாத் நகரம் உள்ளது. அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 8-வது மாடியில் வசித்து வந்தவர் குல்ஷன். இவருக்கு மனைவியும், ஹிரித்திகா (வயது 18) என்ற மகளும், ஹிரித்திக் (17) என்ற மகனும் இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு மகனையும், மகளையும் கணவன்-மனைவி இருவரும் விஷ ஊசி போட்டு கொலை செய்தனர். தாங்கள் ஆசையாக வளர்த்த முயலையும் கொன்றனர்.

பிறகு, கணவன், மனைவியும், அவர்களுடைய பங்குதாரரான சஞ்சனா என்ற பெண்ணும் 8-வது மாடியில் இருந்து கீழே குதித்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே அவர்கள் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அந்த குடும்பத்தினர் வசித்த வீட்டை போலீசார் ‘சீல்’ வைத்தனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, தம்பதி எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றினர்.

இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பு, கணவன், மனைவி, பங்குதாரர் ஆகியோருக்கு இடையே பண பிரச்சினை மற்றும் கள்ளத்தொடர்பு தொடர்பாக வாக்குவாதம் நடந்ததாகவும், அதைத் தொடர்ந்து இந்த விபரீத காரியத்தை அவர்கள் செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News