செய்திகள்

உ.பி.யில் விஷச்சாராயத்துக்கு 10 பேர் பலி

Published On 2019-05-28 10:17 GMT   |   Update On 2019-05-28 10:17 GMT
உத்தரபிரதேசத்தின் பாரபங்கி மாநிலத்தில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த கிராம மக்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலத்தின் சில மாவட்டங்களில் ரகசியமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் தொழிலை பலர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் நேற்று விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அருகாமையில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் வாங்கி குடித்தனர்.

குடித்த சில நிமிடங்களில் அவர்களில் சிலர் கண்ணிருண்டு, ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள ராம்நகர் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியானதும் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசின் முதன்மை செயலாளர் மற்றும் பாரபங்கி மாவட்ட உயரதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்றால் ரூ.10 லட்சம் அபராதம், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News