செய்திகள்

உபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

Published On 2019-04-25 10:39 GMT   |   Update On 2019-04-25 10:39 GMT
உத்தரபிரதேசம் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளரான பிரியங்கா உத்தரபிரதேசத்தில் இன்று பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். #PriyankaGandhi
ஜான்சி:

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  துவங்கிய பாராளுமன்ற தேர்தல் 2 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 5  கட்டங்களாக  ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக பிரியங்கா அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் உத்தரபிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கிழக்கு மண்டலத்தில் இருக்கும் 42 தொகுதிகளின் பொறுப்பாளராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டார்.



அதன் பின்னர் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் பிரியங்கா, ரோட்ஷோ நடத்தி மக்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். இன்று காலை உத்தரபிரதேசத்தின்  ஜான்சி தொகுதியில் பிரம்மாண்டமான ரோட்ஷோ  நடத்தினார். வழிநெடுக காங்கிரஸ் தொண்டர்கள் மலர் தூவி, முழக்கங்களை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

பின்னர்  ஜலாவுன் தொகுதிக்கு உட்பட்ட குர்சராய் மற்றும் ஓராய் பகுதிகளில் பொதுக்கூட்டங்களில் கலந்துக் கொண்டார். இதேப்போல் நாளை மதியம் 12.30 மணி அளவில் உன்னாவோ பகுதியில் ரோட்ஷோ நடத்தி, பின்னர் இஸ்ரவுளி மற்றும் தெவா ஷெரீப் ஆகிய தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  #PriyankaGandhi
Tags:    

Similar News