செய்திகள்

மும்பை தாக்குதலில் உயிரிழந்த வீரரைப் பற்றிய சாத்வி பிராக்யாவின் கருத்துக்கு பாஜக விளக்கம்

Published On 2019-04-19 13:08 GMT   |   Update On 2019-04-19 13:08 GMT
என்னை விசாரனையில் வைத்து கொடுமைப்படுத்திய காவல்துறை அதிகாரியை நான் சபித்ததால் அவர் மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று கூறிய சாத்வி பிராக்யாவின் கருத்துக்கு பாஜக விளக்கம் அளித்துள்ளது. #PragyaThakur #HemantKarkare #martyrKarkare
புதுடெல்லி:

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் இருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலேகானில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி ரம்ஜான் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் என்ற பெண்ணுக்கு விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பின்னர், இதே வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட போது சாத்வி பிராக்யா சிங் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளராக சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாத்வி பிரக்யா சிங், ‘மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தன்னை கைது செய்து லாக்கப்பில் அடைத்துவைத்து விசாரணை நடத்திய ஹேமந்த் கர்க்காரே என்ற போலீஸ்காரர் என்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் சித்ரவதைகளை செய்தார்.

என்னை இப்படி கொடுமைப்படுத்தும் நீயும் உன் குடும்பத்தாரும் நாசமாக போவீர்கள்! என்று நான் அப்போது அவரை சபித்தேன். அதேபோல், 26-11-2013 அன்று மும்பை தாக்குதலின்போது அவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மும்பை தாக்குதலின்போது பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற கடமையாற்றி வீர மரணம் அடைந்த காவல்துறை வீரர் ஹேமந்த் கர்க்காரே-வின் தியாகத்தை கேவலப்படுத்தும் விதமாக இப்படி பேசிய சாத்வி பிரக்யா சிங் தாக்கூரின் கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பாஜக தலைமை இன்று மாலை அளித்துள்ள விளக்கத்தில், ‘ஹேமந்த் கர்க்காரே மும்பை தாக்குதலின்போது பயங்கரவாதிகளுடன் வீரமாக போராடி உயிர் தியாகம் செய்தார். அவரை நாட்டுக்காக தியாகம் செய்த வீரராகவே பாஜக மதிக்கிறது.

அவரைப்பற்றி சாத்வி பிரக்யா சிங் தெரிவித்த கருத்தானது, போலீசாரின் விசாரணையின்போது அவர் பல ஆண்டுகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அனுபவித்த துன்பத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். இது அவரது தனிப்பட்ட கருத்தாகும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. #PragyaThakur #HemantKarkare #martyrKarkare
Tags:    

Similar News