செய்திகள்

காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் போலீஸ் துணை சூப்பிரண்ட், 3 பயங்கரவாதிகள் பலி

Published On 2019-02-24 15:41 GMT   |   Update On 2019-02-24 15:41 GMT
காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று தேடுதல் வேட்டையின்போது ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீஸ் துணை சூப்பிரண்ட்டும் வீரமரணம் அடைந்தார். #militantsencounter #securityforcesencounter #Kulgamencounter
ஜம்மு:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட டுரிகாம் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அப்பகுதியை பயங்கரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். போலீஸ் துணை சூப்பிரண்ட் அமான் தாக்குர் என்பவரும் வீரமரணம் அடைந்தார் என இன்று மாலை முதல்கட்ட தகவல் வெளியானது.



இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சண்டையில் இன்றிரவு நிலவரப்படி புல்வாமா தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப் பட்டதாகவும், ராணுவ உயரதிகாரி ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் காஷ்மீர் மாநில போலீஸ் டி.ஜி.பி. தில்பாக் சிங் தெரிவித்தார்.

இதற்கிடையில், பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த போலீஸ் துணை சூப்பிரண்ட் அமான் தாக்குர் மறைவுக்கு காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் இரங்கல் தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு போலீஸ் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். #militantsencounter #securityforcesencounter #Kulgamencounter
Tags:    

Similar News