செய்திகள்

இந்தியாவில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 377 ஆக அதிகரிப்பு

Published On 2019-02-20 12:10 GMT   |   Update On 2019-02-20 14:26 GMT
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் பன்றிக்காய்ச்சலுக்கு இந்த ஆண்டில் பலியானோர் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. #SwineFlu
புதுடெல்லி:

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு இந்த ஆண்டில் பலியானோர் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.  3 ஆயிரத்து 504 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

ராஜஸ்தானை தொடர்ந்து குஜராத்தில் 71 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்து 983 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தலைநகர் டெல்லியில் 7 பேர் இறந்துள்ளனர். 2 ஆயிரத்து 278 பேர் பாதிக்கப்பட்டனர்.

பஞ்சாப்பில் 31 பேரும், ம.பி.யில் 30 பேரும், இமாசலப்பிரதேசத்தில் 27 பேரும், ஜம்மு காஷ்மீரில் 22 பேரும், மகாராஷ்டிராவில் 17 பேரும், தலைநகர் டெல்லி மற்றும் அரியானாவில் தலா 7 பேரும் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 12 ஆயிரத்து 191 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் பன்றிக்காய்ச்சலுக்கு ஆயிரத்து 103 பேர் பலியானதாகவும், 14 ஆயிரத்து 992 பேர் பாதிக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹெச்1என்1 வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. #SwineFlu 
Tags:    

Similar News