செய்திகள்

பாகிஸ்தான் ஊடுருவல் முறியடிப்பு - ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

Published On 2018-12-31 05:00 GMT   |   Update On 2018-12-31 05:00 GMT
காஷ்மீர் எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருவரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். #BATattack #LoC #Pakistanisoldiers
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியான நவ்காம் செக்டர் கண்காணிப்பு சாவடியில் இன்று அதிகாலை இந்திய படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் அப்பகுதியில் அடர்த்தியான இருள் சூழ்ந்திருந்தது. அங்குள்ள அடர்ந்த காடுகளின் வழியாக பாகிஸ்தானில் இருந்து சில பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதைகண்ட இந்திய வீரர்கள் ஊடுருவ முயன்றவர்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டனர்.

ஆனால், இந்த தாக்குதலை திசை திருப்பும் வகையில் பாகிஸ்தான் எல்லையில் இருந்த ராணுவத்தினர் இந்திய வீரர்களை நோக்கி ஆவேசமாக துப்பாக்கிகளால் சுட்டனர். ஊடுருவ முயன்றவர்களும் ஒருபக்கத்தில் துப்பாக்கிகளால் சுட்டவாறு முன்னேறி வந்தனர்.



இந்த இருதரப்பு தாக்குதல்களுக்கும் இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். விடியவிடிய நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் நமது தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாததால் ஊடுருவ முயன்றவர்கள் காட்டு மரங்களுக்கு இடையில் பதுங்கியவாறு பின்நோக்கிச் சென்றனர்.

பொழுது புலர்ந்த பின்னர் அந்த காட்டுப்பகுதிக்கு சென்ற இந்திய வீரர்கள் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் அணியும் சீருடையுடன் இருவர் இறந்து கிடப்பதை கண்டனர். அவர்கள் அருகாமையில் கிடந்த துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் வெடிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

புத்தாண்டு தினத்தன்று எல்லைப்பகுதியில் உள்ள இந்திய வீரர்களை கொடூரமான முறையில் கொல்வதற்காக இந்த ஊடுருவல் திட்டத்தை பாகிஸ்தான் ராணுவமே முன்நின்று செயல்படுத்தியதாக இந்திய ராணுவ உயரதிகாரிகள் கருதுகின்றனர்.

விழிப்புணர்வுடன் செயல்பட்டு பெரும் அசம்பாவிதம் மற்றும் அன்னிய சக்தியின் ஊடுருவலை முறியடித்த நமது எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். #BATattack #LoC #Pakistanisoldiers 
Tags:    

Similar News