செய்திகள்

எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியால் எட்டாவது நாளாக முடங்கியது பாராளுமன்றம்

Published On 2018-12-21 06:53 GMT   |   Update On 2018-12-21 06:53 GMT
ரபேல் விவகாரம், மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளதால் 8-வது நாளாக இன்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் முடங்கி உள்ளன. #WinterSession #ParliamentStalled
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற வளாகத்திலும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது மக்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்களும் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் தெலுங்குதேசம் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பிற கட்சி எம்பிக்களும் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக ரபேல் விவகாரம், காவிரி விவகாரம் தொடர்பாக உறுப்பினர்கள் இடைவிடாமல் முழக்கங்கள் எழுப்பினர். இதன் காரணமாக பிற்பகல் 2.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. உறுப்பினர்களின் அமளி காரணமாக 8-வது நாளாக பாராளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. #WinterSession #ParliamentStalled
Tags:    

Similar News