செய்திகள்
கேரள முதல் மந்திரி வீட்டை முற்றுகையிட சென்ற பாஜகவினர் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட சென்ற பாஜகவினர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Kearala #PinarayiVijayan #BJPProtest
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்தும் முயற்சியில் கேரள அரசு இறங்கியது.
இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சபரிமலையின் பாரம்பரிய விதிகளை சீர்குலைக்கக் கூடாது என்று அய்யப்ப பக்தர்கள் கூறி வருகின்றனர். கேரளா முழுவதிலும் பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜகவும், இந்து அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியதை தொடர்ந்து, கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளா பாஜகவினர் இன்று முதல் மந்திரி பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது போராட்டக்காரர்களை போலீசார் தடுப்பு அமைத்து தடுத்து நிறுத்தினர். ஆனாலும் பாஜகவினர் தடுப்பை உடைத்து உள்ளே செல்ல முயற்சி மேற்கொண்டனர்.
இதையடுத்து, அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாஜகவினரை விரட்டினர். இச்சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Kearala #PinarayiVijayan #BJPProtest