செய்திகள்

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

Published On 2018-12-06 05:28 GMT   |   Update On 2018-12-06 05:28 GMT
புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் எனவும், இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட தேவையில்லை என்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. #PuducherryAssembly #NominatedMLAs
புதுடெல்லி:

புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. பாரதிய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்த நிலையில், ஆளுநரே நேரடியாக பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.



இவர்களது நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என தீர்ப்பளித்தது. இதையடுத்து காங்கிரசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஆனால் எம்.எல்.ஏ.க்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், நியமனம் எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

அதன்பின்னர் தொடர்ந்து நடந்த வாதப் பிரதிவாதங்கள் கடந்த மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள், புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என அறிவித்தனர். மேலும்  எம்எல்ஏக்கள் நியமனம் விவகாரத்தில் மாநில அரசு தலையிட தேவையில்லை என்றும் அறிவுறுத்தினர். #PuducherryAssembly #NominatedMLAs
Tags:    

Similar News