செய்திகள்
கஜா புயல் சேதத்திற்காக கேரள அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிதியுதவி
கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கேரள அரசு சார்பில் 10 கோடி ருபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. GajaCyclone #GajaCycloneRelief #Kerela #PinaryiVijayan
திருவனந்தபுரம்:
தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார். இதற்கிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கேரள அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கஜா புயலால் பாதிப்படைந்த தமிழக மக்களுக்கு கேரள அரசு சார்பில் 10 கோடி ரூபாய் அளிக்கப்பட உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு என பதிவிட்டுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கேரள அரசு 10 கோடி ரூபாய் வழங்கியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கஜா புயல் பாதிப்புக்கு உதவும்படி கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு கமல்ஹாசன் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. #GajaCyclone #GajaCycloneRelief #Kerela #PinaryiVijayan