செய்திகள்
மக்களின் கவனத்தை திசை திருப்பவே அயோத்தி பிரச்சினை- பா.ஜனதா மீது மாயாவதி குற்றச்சாட்டு
மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் தற்போது ராமர் கோவில் விவகாரத்தை பாஜனதா கையில் எடுத்து உள்ளனர் என்று மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். #Mayawati #Ayodhyaissue #bjp
புதுடெல்லி:
ராமர் கோவில் கட்டவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து அமைப்புகள் சார்பில் அயோத்தியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விசுவ இந்து பரிஷத் சார்பில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாநாடும் நடக்கிறது.
இதுபற்றி பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இப்பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் சில அமைப்புகள் அயோத்தியில் கோவில் கட்ட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இது தவறான அணுகுமுறை. கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை அவர்கள் பொறுத்திருக்க வேண்டும்.
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா பல்வேறு விஷயங்களிலும் தோல்வி கண்டு விட்டது. அதை மறைக்கவும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் தற்போது ராமர் கோவில் விவகாரத்தை மீண்டும் இவர்கள் கையில் எடுத்து உள்ளனர். இதில், நிச்சயமாக அரசியல் தந்திரம் தவிர வேறு எதுவும் கிடையாது. இந்த சதிவேலைக்கு சிவசேனாவும், விசுவ இந்து பரிஷத் அமைப்பும் உடந்தையாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார். #Mayawati #Ayodhyaissue #bjp