ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் - பாரதிய ஜனதாவில் 4 மந்திரிகள் உள்ளிட்ட 43 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் மறுப்பு
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிஜோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் 7-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
ராஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. பாரதிய ஜனதா ஏற்கனவே 131 தொகுதிகளுக்கு கடந்த 11-ந் தேதி வேட்பாளர்களை அறிவித்தது.
நேற்று 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில், 31 வேட்பாளர்கள் இடம்பெற்று இருந்தனர். அதன்படி இது வரை 162 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொகுதிகளில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள 43 பேருக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்படவில்லை. அதில், 4 பேர் மந்திரிகள் ஆவர்.
இதுவரை வந்த பட்டியல் படி 92 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் கிடைத்துள்ளது. மேலும் பா.ஜ.க.வில் முஸ்லிம்கள் யாருக்கும் இதுவரை டிக்கெட் கொடுக்கப்படவில்லை.
கடந்த தேர்தலில் பல முஸ்லிம் வேட்பாளர்களும், பாரதிய ஜனதாவில் நிறுத்தப்பட்டு இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை.
இன்னும் அடுத்த பட்டியல் வர இருக்கிறது. அதில் இடம் அளிக்கப்படுமா? என்று தெரியவில்லை. முஸ்லிம்கள் யாருக்கும் டிக்கெட் வழங்காதது குறித்து காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
இதற்கு பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் சுதன்சு திரிவேதி பதில் அளிக்கும் போது, ஜாதி, மதம் பார்த்து டிக்கெட் வழங்குவது காங்கிரசின் கொள்கை. பாரதிய ஜனதாவை பொருத்த வரை இந்த கொள்கையை பின் பற்றுவதில்லை என்று கூறினார். #RajasthanElections #RajasthanAssemblyElections