செய்திகள்

அயோத்தியாவில் கொரியா ராணிக்கு நினைவகம் - தென்கொரியா அதிபரின் மனைவி திறந்து வைத்தார்

Published On 2018-11-06 11:32 GMT   |   Update On 2018-11-06 11:55 GMT
கொரியா நாட்டு மன்னரை மணந்த அயோத்தி இளவரசிக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தை தென்கொரியா அதிபரின் மனைவி இன்று திறந்து வைத்தார். #YogiAdityanath #KimJungSook
லக்னோ:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது.

இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்த கிம் ஜங்-சூக் நேற்று பிரதமர் நரேந்திர மோடிம் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

நேற்றிரவு உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ வந்து சேர்ந்த அவருக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரித்தார்.

அயோத்தி இளவரசியான சூரிரத்னா கி.பி. 48-ம் ஆண்டுவாக்கில் தென் கொரியாவுக்கு சென்று அங்குள்ள ஒரு சமஸ்தானத்தின் மன்னரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அயோத்தி இளவரசி அழைக்கப்பட்டார். வரலாற்று குறிப்புகளில் அவரது பெயர் ஹூ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரலாறை நினைவுகூரும் வகையில் கொரியா அரசின் ஒத்துழைப்புடன் உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தி நகரில் ஹூ-வின் பெயரால் சுமார் 10 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் சரயு நதிக்கரை ஓரத்தில் உள்ள பூங்காவுக்குள் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்துடன் இன்று அயோத்தி நகருக்கு வந்த தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் இன்று அந்த நினைவிடத்தை திறந்து வைத்தார்.



இந்த திறப்பு விழாவின்போது இந்தியா மற்றும் தென்கொரியா நாட்டு கலைக்குழுவினர் நடத்திய நடன நிகழ்ச்சியை யோகி ஆதித்யாநாத், கிம் ஜங்-சூக் உள்ளிட்டோர் ரசித்து மகிழ்ந்தனர்.

இன்றிரவு சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும் பிரமாண்டமான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்கிறார். பின்னர், டெல்லி திரும்பும் அவர் தனிவிமானத்தில் தென்கொரியாவின் சியோல் நகருக்கு புறப்பட்டு செல்கிறார். #YogiAdityanath #KimJungSook #QueenHuh #QueenHuhMemorial 
Tags:    

Similar News