செய்திகள்

ராஜீவ் காந்தியை கொன்ற பாணியில் தீர்த்துக் கட்டுவோம் - கேரளா பா.ஜ.க. தலைவருக்கு மிரட்டல்

Published On 2018-11-03 14:39 GMT   |   Update On 2018-11-03 14:39 GMT
ராஜீவ் காந்தியை கொன்ற பாணியில் கேரள மாநில பா.ஜ.க. தலைவர் ஸ்ரீதரன் பிள்ளையை கொல்லப்போவதாக மும்பையில் இருந்து வந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். #SreedharanPillai
திருவனந்தபுரம்:

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வழிபாடு செய்யவரும் அனைத்து வயது பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என கேரள மாநிலத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

ஆனால், சபரிமலை சம்பிரதாயங்களின்படி 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க கூடாது என பா.ஜ.க. உள்ளிட்ட சில கட்சிகளும் மத அமைப்புகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.



இந்த நிலைப்பாட்டை மையமாக வைத்து சபரிமலையில் பின்பற்றப்பட்டு வரும் பழமைமிக்க சம்பிரதாயங்களை காப்பாற்றும் நோக்கத்தில் கேரள மாநில பா.ஜ.க. மற்றும் பாரத் தர்ம ஜனசேனா ஆகிய அமைப்பின் தொண்டர்கள் இங்குள்ள காசர்கோடு பகுதியில் இருந்து வரும் 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ரத யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கேரள மாநில பா.ஜ.க. தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு தபால் மூலம் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நான் மும்பையை சேர்ந்த 66 வயது மலையாளி. நான் மும்பையில் இருந்து கேரளாவுக்கு வந்து ஸ்ரீதரன் பிள்ளை தலைமையில் பா.ஜ.க. நடத்தும் ரத யாத்திரையில் கலந்து கொள்ளப் போகிறேன்.  ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்கு இணையான செய்தியை நான் ஏற்படுத்தப்போகிறேன் என கடந்த மாதம் 29-ம் தேதியிட்ட அந்த கடிதத்தை அனுப்பிய  மர்மநபர் தனது பெயரை மோகன் கே நாயர் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்கு வந்த இந்த கடிதத்தின் அடிப்படையில் கேரளா போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
#KeralaBJPchief #SreedharanPillai #SreedharanPillaideaththreat
Tags:    

Similar News