செய்திகள்

ஜெகன்மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ்

Published On 2018-10-27 06:24 GMT   |   Update On 2018-10-27 06:24 GMT
விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். #JaganmohanReddy
நகரி:

ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 25-ந்தேதி விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு சென்றபோது அவரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தினார்.

இதில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கையில் காயம் ஏற்பட்டது. கத்தியால் குத்திய வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் விமான நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்க்கும் சீனிவாஸ் என்பது தெரிந்தது.

காயம் அடைந்த ஜெகன்மோகன் ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம் ஜெகன்மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்து காரில் ஏறியபோது தொண்டர்களை பார்த்து தனக்கு ஒன்றுமில்லை, நான் நன்றாகவே இருக்கிறேன் என்று சிரித்தபடியே கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே கத்தியால் குத்திய சீனிவாஸ் பணிபுரியும் ஓட்டலின் உரிமையாளர் அர்‌ஷவர்தன் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் என்றும் ஜெகன்மோகன் ரெட்டியை கொல்ல அரசு சதி செய்கிறது என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் முதல்வர் சந்திர பாபு நாயுடு கூறும்போது, ஜெகன்மோகன் ரெட்டி மீது நடந்த கத்திகுத்து சம்பவம் ஒரு நாடகம் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே ஜெகன் மோகன் ரெட்டி மீது நடந்த கொலை முயற்சி குறித்து ஆந்திர மாநில அரசு நடத்தும் விசாரணை மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றும் மூன்றாவது நபர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ரிட் மனுதாக்கல் செய்தனர்.

மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு எம்.பி. பதவியை ராஜினாமா செய்த ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா ஒய். வி.சுப்பாரெட்டி சார்பில் வழக்கறிஞர்கள் அனில் குமார், அமர்நாத் ரெட்டி மனுவை தாக்கல் செய்தனர். #JaganmohanReddy
Tags:    

Similar News