செய்திகள்

மோடி வெற்றி பெற வாக்களித்த மக்கள் தற்போது குஜராத்தில் தாக்கப்படுகிறார்கள் - மாயாவதி

Published On 2018-10-09 17:08 GMT   |   Update On 2018-10-09 17:08 GMT
வாரணாசியில் பிரதமர் மோடிக்கு வாக்களித்த மக்கள் மீது குஜராத்தில் தாக்குதல் நடைபெற்று வருகிறது, இதை மாநில அரசு வேடிக்கை பார்த்து வருவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். #Mayawati
புதுடெல்லி :

குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து, உ.பி. மற்றும் பீகார் மாநிலத்தவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. 

குற்றத்தை செய்தவர் பிழைப்புக்காக குஜராத்திற்கு வந்தவர் என தெரிந்ததும், குடிபெயர்ந்தவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. 6 மாவட்டங்களில் பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தவர்களை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தது. இதுதொடர்பாக போலீஸ் விசாரணையை மேற்கொண்டுள்ளது.

 450 பேர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநில முதல்வர்கள், குஜராத் முதல்வரிடம் பேசியுள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய அரசிடம் குஜராத் உள்துறை அறிக்கையை அளித்துள்ளது. 6 மாவட்டங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பீகார், உத்தரபிரதேச மக்கள் பயம் காரணமாக அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். இத்தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பேசுகையில், பிரதமர் மோடிக்கு வாக்களித்த உத்தரபிரதேசம், பீகார் மாநில மக்கள் தாக்கப்படுகிறார்கள், குஜராத் அரசு வேடிக்கை பார்க்கிறது என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். 
 
மாயாவதி பேசுகையில், “ குஜராத்தில் உத்தரபிரதேசம், பீகார் மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது மிகவும் வருந்ததக்கது. இந்த பிரச்சினையை வைத்து அரசியல் செய்யக்கூடாது. தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரணாசியில் பிரதமர் மோடி வெற்றி பெற வாக்களித்த மக்கள் தற்போது குஜராத்தில் தாக்கப்படுகிறார்கள்.

 ஆனால் குஜராத் பா.ஜனதா அரசு, இதனை வேடிக்கை பார்க்கிறது. பீகார், உத்தரபிரதேசம் மக்கள் வெளிநாட்டவர் கிடையாது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குஜராத் அரசின் கடமையாகும்’’ என கூறினார். #Mayawati
Tags:    

Similar News