செய்திகள்
டெல்லியில் வீடு இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
டெல்லியில் மூன்றடுக்கு வீடு இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. #childrenkilled #Delhibuildingcollapse
புதுடெல்லி:
டெல்லியின் வடமேற்கில் உள்ள அசோக் விஹார் பகுதியில் ஒரு மூன்றடுக்கு மாடி வீடு இன்று காலை 9.30 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் வசித்துவந்த பல குடும்பத்தினர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இடிபாடுகளில் இருந்து சிலரை காயங்களுடன் மீட்டனர். மேலும், 10 வயதுக்குட்பட்ட இரு சகோதர்கள், 5 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் மற்றும் அவனது சகோதரி, ஒரு பெண் ஆகிய 5 பேர் பிரேதமாக மீட்கப்பட்டனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், மூன்றடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், இடிபாடுகளில் சிக்கி இறந்த ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து, வீடு இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்தனர்.
சுமார் 20 ஆண்டுகள் பழைமையான அந்த கட்டிடத்தை கடந்த 3 வாரங்களுக்கு முன் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #childrenkilled #Delhibuildingcollapse