செய்திகள்

காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க பாஜக முயற்சி - கர்நாடக துணை முதல்வர் பகீர் குற்றச்சாட்டு

Published On 2018-09-14 10:18 GMT   |   Update On 2018-09-14 10:18 GMT
கர்நாடக மாநிலத்தில் கூட்டணி அரசை குலைப்பதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக லஞ்சம் கொடுக்க முயற்சிப்பதாக துணை முதல்வர் பரமேஸ்வரா குற்றம்சாட்டியுள்ளார். #Parameshwara #KarnatakaCongress
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி அரசில் அமைச்சர் பதவி கிடைக்காததால் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனினும் கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்படக்கூடாது என காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும், சில எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரப்போவதாகவும், இதன் காரணமாக கூட்டணி அரசு விரைவில் கவிழும் என்றும் செய்திகள் வெளியாகின.



இந்நிலையில், துணை முதல்வர் பரமேஸ்வரா இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. உறுப்பினர்களிடையே சில காரணங்களால் அதிருப்தி இருப்பது உண்மைதான். ஆனால் அது அவர்கள் தொகுதி சார்ந்த பிரச்சினைகள் மட்டும்தான். கூட்டணி அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

அரசுக்கும், அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கும் இடையிலான அனைத்து பிரச்சினைகளும் பேசி தீர்க்கப்படும். சில காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக லஞ்சம் கொடுத்து தங்கள் பக்கம் இழுப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக தகவல் வந்துள்ளது. இதுபற்றி ஊடக தகவல்களின் அடிப்டையில் போலீசில் புகார் அளிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் அமைச்சரவையில் காங்கிரசுக்கு வழங்கவேண்டிய 6 இடங்கள் குறித்து கேட்டதற்கு, சித்தராமையா வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பியதும் இறுதி செய்யப்படும் என்றார் பரமேஸ்வரா. #Parameshwara #KarnatakaCongress

Tags:    

Similar News