செய்திகள்

நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்ட ஆணையம் விரைவில் சிபாரிசு

Published On 2018-08-27 19:44 GMT   |   Update On 2018-08-27 19:44 GMT
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக செய்யப்பட வேண்டிய சட்ட திருத்தங்கள் குறித்து சட்ட ஆணையம் இந்த வாரம் சிபாரிசு செய்ய உள்ளது. #SimultaneousPolls #LawPanel
புதுடெல்லி:

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக, அனைத்து கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை ஏற்படுத்த முயன்று வருகிறது.

வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடப்பதால், அதிக செலவு ஏற்படுவதுடன், நலத்திட்ட பணிகள் பாதிப்பு, பாதுகாப்பு படையினருக்கு பணிச்சுமை போன்ற பாதிப்புகளும் ஏற்படுவதாக மத்திய அரசு கருதுகிறது. எனவே, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம், இந்த பாதிப்புகளை தவிர்க்க விரும்புகிறது.



மக்களவை, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்ட ஆணையமும் சிபாரிசு செய்துள்ளது. இப்படி தேர்தல் நடத்த, மக்களவை, சட்டசபைகளின் பதவிக்காலம் தொடர்பான அரசியல் சட்டத்தின் 83(2), 172(1) ஆகிய பிரிவுகளிலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும்.

இந்த திருத்தங்கள் உள்பட சட்டரீதியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து சட்ட ஆணையம் இந்த வாரம் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய உள்ளது. இத்தகவல்களை சட்ட ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்ட ஆணையத்தின் சிபாரிசுகள், மத்திய அரசை கட்டுப்படுத்தாது. இருப்பினும், இந்த சிபாரிசுகள், அரசியல் கட்சிகளிடையே ஒரு விவாதத்தை உருவாக்க உதவும் என்று கருதப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம், சட்ட ஆணையம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:-

மக்களவை, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை 2 கட்டங்களாக செய்யலாம். 2019-ம் ஆண்டு, சில மாநிலங்களுக்கும், 2024-ம் ஆண்டு சில மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தலாம். இதற்காக, அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தங்கள் செய்ய வேண்டும். அவற்றுக்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஒருவேளை, இடையிலேயே ஒரு அரசு கவிழ்ந்தால், புதிதாக அமையும் மாற்று அரசு, மீதி பதவிக்காலத்துக்குத்தான் பதவி வகிக்க வேண்டுமே தவிர, இன்னொரு 5 ஆண்டுகளுக்கு அல்ல.

ஒரு அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும்போது, அதன் பின்னாலேயே நம்பிக்கை தீர்மானமும் கொண்டுவர வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை பலம் இல்லாதநிலையில், முந்தைய அரசையே நீடிக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #SimultaneousPolls #LawPanel
Tags:    

Similar News