செய்திகள்

கர்நாடகாவில் மழைவெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் இருந்த பெண்ணுக்கு திருமணம்

Published On 2018-08-26 23:03 GMT   |   Update On 2018-08-26 23:03 GMT
கர்நாடகாவில் மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் இருந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. அவர் கேரளாவை சேர்ந்தவரை கரம் பிடித்தார். #KarnatakaFloods #Marriage
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் எம்மேட்டு பகுதியை சேர்ந்த மஞ்சுளாவுக்கு கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ராஜீஷ் என்பவருடன் 26-ந்தேதி (அதாவது நேற்று) திருமணம் செய்ய ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குடகில் ஏற்பட்ட மழை வெள்ளம், நிலச்சரிவால், மஞ்சுளாவின் வீடு இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மஞ்சுளா மற்றும் அவருடைய பெற்றோர் உயிர் தப்பினர். தற்போது அவர்கள் மக்கந்தூரில் உள்ள நிவாரண முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகை-பணம், பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி திருமணம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்தநிலையில் நிவாரண முகாமில் இருந்தவர்களும், தன்னார்வ தொண்டு அமைப்பினரும், மாவட்ட நிர்வாகமும் சேர்ந்து மஞ்சுளாவின் திருமணத்தை திட்டமிட்டபடி நடத்த ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த முதல்-மந்திரி குமாரசாமி, மஞ்சுளாவின் திருமணத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் திட்டமிட்டபடி நேற்று மடிகேரி ஓம்காரேஸ்வரா கோவிலில் மஞ்சுளா-ராஜீஷ் திருமணம் நடந்தது. இதில் நிவாரண முகாமில் இருந்த மக்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு புதுமண ஜோடியை வாழ்த்தினர்.

இந்த திருமணத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவித்யா கலந்து கொண்டு புதுமண தம்பதிக்கு அரசு சார்பில் ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 
Tags:    

Similar News