செய்திகள்

நடிகர் ராஜ்குமாரை மீட்டது பற்றி எஸ்.எம்.கிருஷ்ணா எழுதிய புத்தகம்- ரகசியங்கள் வெளியாகும் என எதிர்பார்ப்பு

Published On 2018-08-16 10:51 GMT   |   Update On 2018-08-16 10:51 GMT
வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்டது பற்றி எஸ்.எம்.கிருஷ்ணா எழுதிய புத்தகத்தில் பல்வேறு ரகசியங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #SMKrishnas #actorRajkumar #veerappan

பெங்களூரு:

மேற்குதொடர்ச்சி மலைக் காடுகளில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த சந்தன கடத்தல் வீரப்பன் 2000-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி சென்றான்.

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ராஜ்குமார் இருந்தபோது வீரப்பன் அவரை கடத்தினான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

108 நாட்கள் வீரப்பனின் பிடியில் இருந்த ராஜ்குமார் பின்னர் பேச்சுவார்த்தை மூலம் மீட்கப்பட்டார்.

நக்கீரன் கோபால் இடைத் தரகராக இருந்த பேச்சு வார்தைகள் மேற்கொள்ள இறுதியாக பழ.நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, புதுவை சுகுமாறன் ஆகியோர் சென்று வீரப்பனுடன் பேச்சுவார்த்தை ராஜ்குமாரை பத்திரமாக மீட்டு வந்தனர்.

அப்போது கர்காடகாவில் எஸ்.எம். கிருஷ்ணாவும், தமிழ்நாட்டில் கருணாநிதியும் முதல்-அமைச்சராக இருந்து வந்தனர். ராஜ்குமார் கடத்தப்பட்டதற்கு பிறகு நடந்த சம்பவங்கள் அவர் மீட்கப்பட்டபோது நடந்த பேச்சுவார்தைகள் அதில் எடுக்கப்பட்ட உடன்பாடுகள் போன்றவை பற்றி இன்னும் முழுமையான விவரங்கள் வெளியே வரவில்லை.பணம் கைமாறியதா? என்ற விவரமும் தெரியவில்லை.

ஒருசில தகவல்கள் மட்டும் தான் வெளிவந்துள்ளன. இன்னும் பல ரகசியங்கள் அம்பலமாக வேண்டியது உள்ளது.

இந்த நிலையில் எஸ்.எம். கிருஷ்ணா தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அடுத்த மாதம் இந்த புத்தகம் வெளிவர உள்ளது.

அதில், ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக விரிவான விவரங்களை குறிப்பிட்டிருக்கிறார். அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் இது சம்பந்தமாக பேசியது, நக்கீரன் கோபாலை தூதுவராக அனுப்பியது, வீரப்பனுடன் நடந்த பேச்சுவார்த்தைகள், வீரப்பனுடன் எஸ்.எம். கிருஷ்ணாவே நேரடியாக பேசியது, பின்னர் மீட்பு குழுவினர் சென்று மீட்டு வந்தது போன்றவற்றில் நடந்த பல்வேறு ரகசியங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த புத்தகம் வெளிவந்தால் ராஜ்குமார் கடத்தலின் பின்னணி அப்போது நடந்த பேச்சு வார்த்தைகள் உள்ளிட்ட பல்வேறு ரகசியங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், எஸ்.எம். கிருஷ்ணா தனது அரசியல் வாழ்க்கை பற்றியும் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரசில் அவரது பணிகள், பின்னர் கட்சியில் ஓரங்கட்டப்பட்டது, பாரதீய ஜனதாவில் சேர்ந்தது போன்ற விவரங்களையும் தெரிவித்துள்ளார்.

எஸ்.எம். கிருஷ்ணா கர்நாடக அரசியலில் 50 ஆண்டு காலம் கோலோச்சியவர் ஆவார். அவர் எம்.எல்.ஏ., மாநில மேல்சபை உறுப்பினர், அமைச்சர், சபாநாயகர், துணை முதல்-மந்திரி, முதல்-மந்திரி, மத்திய மந்திரி, கவர்னர் என பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

இவர் பல்வேறு அரசியல் ரகசியங்களையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SMKrishnas #actorRajkumar #veerappan

Tags:    

Similar News