செய்திகள்

ஊர் சுற்றி கின்னஸ் சாதனை படைத்த தந்தையும் மகனும்

Published On 2018-08-16 10:47 GMT   |   Update On 2018-08-16 11:13 GMT
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவில் உள்ள புராதன தளங்களை 12 மணி நேரத்தில் சுற்றி பார்த்ததற்காக துபாயைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தந்தைக்கும், மகனுக்கும் கின்னஸ் புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட துபாயில் வாழும் முகமது தாகிர் என்பவரும், அவரது மகன் முகமது ஆயான் உடன் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் நடத்திய சாகச போட்டி ஒன்றில் பங்கேற்றார். அந்த போட்டியில் 22 பேர் பங்கேற்றனர்.

இந்த போட்டியின்போது இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய நினைவிடங்களை 11 மணி நேரம் 33 நிமிடங்களில் சுற்றி பார்த்து சாதனை படைத்துள்ளனர் அந்த தந்தையும், மகனும்.

இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த பயணத்துக்கு அவர்கள் பயன்படுத்தியது முழுக்க முழுக்க பொதுத்துறை வாகனங்கள் மட்டுமே. அதாவது இந்தியாவில் உள்ள போக்குவரத்து நெரிசலில், ஆட்டோ ரிக்‌ஷா, டாக்ஸி, அரசு பேருந்து, மற்றும் ரெயில்களில் பயணித்து சுமார் 300 கிலோ மீட்டர்களை அந்த குறைந்த நேரத்தில் கடந்துள்ளனர்.

இந்த பயணத்தில் தாஜ் மகால் துவங்கி, ஆக்ரா கோட்டை,  உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஃபதேபூர் சிக்ரி, ராஜஸ்தானில் உள்ள கியோலடியோ தேசிய பூங்கா,  டெல்லியில் உள்ள முகலாய அரசர் உமாயுனின் கல்லறை, செங்கோட்டை, குதூப்மினார் உள்ளிட்ட இடங்களை அவர்கள் சுற்றிவந்துள்ளனர்.

இதற்கு முன்னதாக கின்னஸ் சாதனையில் 24 மணி நேரத்தில் முடிக்கப்பட்ட இந்த சாதனை தற்போது 12 மணி நேரத்தில் முடிக்கப்பட்டு தந்தையும் மகனும் கின்னஸில் இடம் பிடித்துள்ளனர். இதுதொடர்பாக துபாய் பத்திரிக்கை ஒன்றில் பேட்டியளித்த தந்தை முகமது தாகிர், இந்த முழு பயணத்திலும், பேருந்துக்காகவும், ரெயிலுக்காகவும் காத்திருந்த சமயங்களில் மட்டுமே ஓய்வெடுத்ததாகவும், அந்த நேரத்திலேயே தங்களது சாப்பாட்டை முடித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News