செய்திகள்

மழையால் தத்தளிக்கும் கேரளா - முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு உதவும்படி ராகுல் வேண்டுகோள்

Published On 2018-08-16 07:15 GMT   |   Update On 2018-08-16 07:15 GMT
கேரள மாநிலம் மழை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை வழங்கும்படி ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். #KeralaRain #KeralaFloods #Rahul
புதுடெல்லி:

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 1924-ம் ஆண்டுக்கு பிறகு மிக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீர்நிலைகளில் நீர்மட்டம் மேலும் உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் சேதம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.



‘ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். நிவாரண முகாம்கள் நிரம்பிவிட்டன. பலர் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். எனவே, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை வழங்க வேண்டும்’ என ராகுல் டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், முதலமைச்சரின் நிவாரண நிதியை வழங்குவதற்கான கேரள அரசின் இணையதள முகவரியையும் (donation.cmdrf.kerala.gov.in) ராகுல் தனது டுவிட்டரில் டேக் செய்துள்ளார். #KeralaRain #KeralaFloods #Rahul
Tags:    

Similar News