செய்திகள்

2 மாதங்களில் 5 முன்னாள் நீதிபதிகளுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2018-08-14 19:10 GMT   |   Update On 2018-08-14 19:10 GMT
முன்னாள் நீதிபதிகள் 5 பேருக்கும் அவர்களுக்கு முறைப்படியாக கிடைக்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை 2 மாதங்களுக்குள் வழங்குமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #TamilnaduGovernment
புதுடெல்லி:

வக்கீல்களாக இருந்த கே.அன்பழகன், பி.ஜி.ராஜகோபால், ஜி.சாவித்திரி, ஆர்.ராதா, ஏ.எஸ்.ஹசீனா ஆகியோரை தற்காலிகமாக 5 ஆண்டுகளுக்கு விரைவு கோர்ட்டு நீதிபதிகளாக கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை ஐகோர்ட்டு நியமித்தது. பின்னர் அவர்களுடைய பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. 2011-12-ம் ஆண்டு அவர்கள் 60 வயதை அடைந்ததும், அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் தரப்பில், தங்களுக்கு மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டு நீதிபதிகள் என்ற அடிப்படையில் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதை ஏற்க மறுத்து ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து அவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ததோடு, முன்னாள் நீதிபதிகள் 5 பேருக்கும் அவர்களுக்கு முறைப்படியாக கிடைக்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை 2 மாதங்களுக்குள் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்கள். 
Tags:    

Similar News