செய்திகள்
வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை - கெஜ்ரிவால்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்லில் யாருடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #ArvindKejriwal #ParlimentElection
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, லோக்சபா பொதுத் தேர்தலை ஓரிரு மாதங்களில் நாடு சந்திக்க உள்ளது.
இதற்கிடையே, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தனது தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
மேலும், தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவும் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதில் ஆம் ஆத்மி கட்சியும் இணையலாம் என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்லில் யாருடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலம் ரோட்டக் சென்ற ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து கூறுகையில், டெல்லியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை பிரதமர் மோடி அரசு முடக்கி வைத்துள்ளது. மக்கள் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசிடம் போராட வேண்டியுள்ளது. எனவே, வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது.
வரவுள்ள அரியானா சட்டசபை தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என தெரிவித்துள்ளார். #ArvindKejriwal #ParlimentElection