செய்திகள்

ஆதார் லீக் புகழ் ராம் சேவாக் ஷர்மா மீண்டும் ட்ராய் தலைவராக நியமனம்

Published On 2018-08-09 12:25 GMT   |   Update On 2018-08-09 12:25 GMT
ட்ராய் அமைப்பின் தலைவராக இருந்துவந்த ராம் சேவாக் ஷர்மா அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் ட்ராய் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். #TRAI #RamSewakSharma
புதுடெல்லி:

ட்ராய் எனப்படும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ராம் சேவாக் ஷர்மா. இவர் இதற்கு முன்னர் ஆதார் ஆணையத்தின் இயக்குனராக பணிபுரிந்தார். இவர் சமீபத்தில் தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்டு, முடிந்தால் இந்த ஆதார் எண்ணை பயன்படுத்தி எனக்கு பாதகம் விளைவிக்க முயற்சியுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்த ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர், இந்த சவாலை ஏற்று, ஷர்மாவின் முழு விவரங்களையும் ட்விட்டரில் பதிவிட்டார். அதுமட்டுமின்றி, அவருடைய வங்கி கணக்கில் 1 ரூபாய் பணத்தை டெபாசிட்டும் செய்தார்.

இந்த சம்பவம் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆதார் மீது இருந்த குறைந்தபட்ச நம்பகத்தன்மையும் இதனால் பறிபோனதாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இவ்வாறு தனது ஆதார் எண்ணை பதிவிட்டதன்மூலம் ஒரே இரவில் உலக அளவில் பிரசித்தி பெற்ற ஷர்மா தற்போது மீண்டும் ட்ராய் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2020-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை இவரது பதவிக்காலம் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TRAI #RamSewakSharma
Tags:    

Similar News