செய்திகள்

கொச்சி கடலில் படகு மீது கப்பல் மோதல் - 3 பேர் பலி

Published On 2018-08-07 11:49 IST   |   Update On 2018-08-07 11:49:00 IST
கொச்சி கடற்கரையில் மீன்பிடிக்க சென்ற படகு மீது கப்பல் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கொச்சியில் முனபத் கடற்கரை உள்ளது. இங்கு இன்று காலை ஒரு படகில் 18 பேர் மீன்பிடிக்க சென்றனர். முனபத் கடற்கரையில் இருந்து 2 கி.மீட்டர் தூரம் கடலுக்குள் சென்றதும் அந்த வழியாக வேகமாக செல்லும் ஒரு கப்பல் வந்தது.

எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த கப்பல் மீன் பிடிக்க சென்ற படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படகில் இருந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இது குறித்து கொச்சி போலீசாருக்கு தெரியவந்ததும் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கடலில் தத்தளித்த 15 பேரை மீட்டனர். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயம் அடைந்த 12 பேர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் 3 பேர் மாயமாகி விட்டனர். அவர்களை பல மணிநேரம் தேடியும் கிடைக்கவில்லை.

பலியான 3 பேரும் கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையை சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது. இது குறித்து கொச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News